தமிழக பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு
சென்னை: பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து உரிய நடவடக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது முதல்வர் அளித்த பதில்:
2001-06ம் ஆண்டு வரை 10,000 போலீசாருக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 7,852 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. 2006-09ம் ஆண்டில் 7,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 5,560 வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.
தமிழகத்தில் 196 மகளிர் காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 1,466 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 1,199 காவல் நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
பெண் போலீசாருக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உரிய முறையில் பரிசீலிக்கும், முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு நாள் மனு நீதி நாள் நடத்தி மக்களிடம் குறைகளைக் கேட்பது போல எஸ்பி அலுவலகங்களிலும் மனு நீதி நாள் நடத்தி பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றார்.