வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள்!
டெல்லி: 11வது ஐந்தாண்டு திட்டகால இறுதிக்குள் பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை மூலம் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஹரீஷ் ரவாத் கூறினார்.
மக்களவையில் பேசிய அவர்,
2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2 லட்சம் பொறியாளர்களும், 1.32 லட்சம் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் வேலையில்லாமல் உள்ளனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு காரணமாக வேலையிழந்த பொறியாளர்கள், டிப்ளமோதாரர்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகம்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் மாணவர்கள் எண்ணிக்கை 2003ம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2003ல் 82,000 பேர் வேலையில்லாமல் இருந்தனர். இது 2005ல் 1.12 லட்சமாக உயர்ந்தது.
ஆனால், 2006ல் இந்த எண்ணிக்கை 48,000 ஆகக் குறைந்தது. இப்போது மீண்டும் 2 லட்சமாக அதிகரித்துவிட்டது.
அதேபோல 2003ல் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் 1.31 லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்தனர். இது 2005ல் 1.07 லட்சமாக இருந்தது. 2006ல் இது 45,000 ஆகக் குறைந்தது. இப்போது மீண்டும் 1.32 லட்சமாக அதிகரித்துவிட்டது.
11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திட்டகால இறுதிக்குள் இது 1.5 கோடியாக அதிகரிக்கப்படும் என்றார்.