காமராஜர் பிறந்த நாள்-சரத் கோரிக்கை
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதன் நகலை தமிழக முதல்வசருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாஜக தலைவர் அத்வானிக்கும் அனுப்பி, அவர்களும் மேற்படி முயற்சிக்கு பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
மாசில்லாத உலகத்தை உருவாக்குவது, பெட்ரோல், எரிபொருள் தேவையைக் குறைத்தல், சூரிய சக்தி கொண்டு மின் உற்பத்தி செய்தல், சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களை உருவாக்குதல், நிறைய மரங்களை நடுதல்,
காடுகளை உருவாக்குதல், காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுதல் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தி இயற்கை சக்திகளின் பயன்பாட்டை அதிகமாக்குதல், காற்றாலைகளை கொண்டு மின்சாரம் தயாரித்தல், எளிய முறையில் வாழ்வது ஆகியவை தான் உலகம் வெப்பமயமாவதை தடுக்கும் தீர்வாகும்.
அதற்காக நம் கட்சி நிர்வாகிகள் இது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்த அயராது பாடுபட வேண்டும். இதை என் பிறந்த நாள் வேண்டுகோளாக வைக்கிறேன்.
அத்துடன் இலங்கையில் இன்னலில் தவிக்கும் நம் ரத்த சொந்தங்கள் பூரண மறுவாழ்வு பெற்று அவர்கள் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் திரும்ப வேண்டும் என என் பிறந்த நாளில் இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய்காந்த் கோரிக்கை..:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கல்வி என்று சொன்னால் பெருந்தலைவர் காமராஜர் பெயர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும், படிப்பு கிடைக்கும் வகையில் கல்வியில் புரட்சி செய்த பெருமை அவருக்குண்டு.
இன்றும் தமிழ்நாட்டில் 65 லட்சம் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு சென்றாலும், இதில் பாதிப்பேர் இன்னும் சரிவர எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
வசதிப்படைத்தவர்களுக்கு கல்வியில் கிடைக்கின்ற வாய்ப்பு எளியவர்களுக்கு இன்றும் கிடைப்பது இல்லை. சமச்சீர் கல்வி என்பது ஏட்டளவில் தான் உள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டம் என்று இந்திய அரசு கூறினாலும் இந்த ஆண்டு ஆரம்பக் கல்விக்கு வெறும் ரூ. 200 கோடிதான் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
ஏழைகள் ஓட்டுப் போட முடியுமே தவிர, தேர்தலில் நின்று வெற்றி பெற்று பொறுப்புக்கு வர முடியாத இன்றைய போலி ஜனநாயகத்தில் உலகத்திலேயே எழுத, படிக்கத் தெரியாதவர்கள் இந்தியாவிலே தான் அதிகம் இருக்கிறார்கள் என்பதில் வியப்பில்லை.
பெருந்தலைவர் காமராஜரின் 107வது பிறந்த நாள் விழா, நாளை வருவதையொட்டி அவரது சிலைக்கும் அல்லது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு தேமுதிகவைச் சேர்ந்த கழக நிர்வாகிகளையும், அணி நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.