அரசு பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி மையங்கள்
சென்னை: அரசு பொறியியல் கல்லூரிகளில் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களின் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.
சட்டப் பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
அரசு பொறியியல் கல்லூரிகளில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது மையத்தை அமைக்க அனுமதிக்கப்படும். இதன்மூலம் படிக்கும்போதே பொறியியல் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி கிடைக்கச் செய்யப்படும்.
பொருளாதார மந்தநிலை இருந்தபோதும், தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி, 2008-09-ம் ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.டி. ஏற்றுமதி வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
அனைத்து அரசு சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களும் இணையத் தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு 'சாப்ட் காப்பிகளாக' வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதை மக்கள் டெளன்லோட் செய்து பயன்படுத்தவும் விண்ணப்பங்களை மின்னணு முறையிலேயே சமர்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னணு கழிவுகளில் இருக்கும் ஈயம், காட்மியம், பாதரசம், பாலி வினைல் குளோரைடு ஆகிய பொருள்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாவிட்டால் மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகுந்த கேடு விளையும். இதைத் தவிர்க்க அரசு விரிவான ஒரு மின்னணு கழிவு கொள்கையை உருவாக்க உள்ளது.
செல்போன்கள் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகளை அளிக்க, செல்போன் நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுடன் சேர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறை முயற்சி மேற்கொள்ளும்.
ர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பவியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உதவ கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் துறை வல்லுனர்கள் கொண்ட சிந்தனைக் குழு (Think tank) உருவாக்கப்படும் என்றார்.