படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் 2வது மகன் படம் வெளியீடு-இணையதளம் முடக்கம்
பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, 2வது மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோர் இலங்கை ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் இதுவரை சார்லஸ் அந்தோணி, பிரபாகரன் ஆகியோரது உயிரற்ற உடல்களைத்தான் இலங்கை ராணுவம் காட்டியுள்ளது.
பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்த தகவல்கள் இல்லாமல் இருந்தது.
இவர்களில் சிறுவனான பாலச்சந்திரனை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், பிரபாகரனையும் உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து பின்னர் கொன்றதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதை விட கொடுமையாக, பிரபாகரனின் கண் முன்பாகவே பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொழும்பைச் சேர்ந்த லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையதளம் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது.
அதில், அவரது உடலில் மார்புப் பகுதி உள்பட மொத்தம் ஐந்து இடங்களில் துப்பாக்கியால் சுட்டுள்ள தடயங்களும் காணப்படுகின்றன.
பார்க்கவே மிகக் கொடூரமாக உள்ள இந்த காட்சியை, செய்தியுடன் வெளியிட்டிருந்த லங்கா நியூஸ் இணையதளத்தை உடனடியாக இலங்கை அரசு முடக்கி விட்டது.
பிரபாகரனின் மகனை சித்திரவதை செய்துதான் கொன்றுள்ளனர் என்பது இந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ள முடியும்.
இந்த உண்மையை வெளியிட்டதற்காக சிங்கள இணையதளம் என்று கூடப் பார்க்காமல் அதை முடக்கி விட்டது இலங்கை அரசு.