கப்பல்.. தூத்துக்குடியை 'வாட்டும்' குஜராத் உப்பு
தூத்துக்குடி: குஜராத்திலிருந்து 28,000 டன் உப்பு கப்பல் இன்று தூத்துக்குடிக்கு வருகிறது. இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை சரியும் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியிலிருந்து இலங்கை, இந்தோனேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதியாகிறது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தூத்துக்குடியில் உப்பு விளைச்சல் 50 சதவீதம் குறைந்தது.
அதே நேரத்தில் குஜராத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடப்பதாலும், கப்பல் வாடகை வெகுவாகக் குறைந்துள்ளதாலும், அங்கிருந்து தூத்துக்குடிக்கு கடந்த 3 மாதங்களாக உப்பு வரத்து தொடங்கியுள்ளது. இங்கிருந்து அது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி மேலும் உப்புக் கப்பல் தூததுக்குடி துறைமுகத்திற்கு புறப்பட்டது. மகாபத்மஜா என்ற பெயருடைய இந்த கப்பலில் 28,000 டன் உப்பு தூத்துக்குடிக்கு வருகிறது. இன்று இந்தக் கப்பல் தூத்துக்குடிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம் உருவான நாளிலிருந்து இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது வழக்கம். ஆனால் இந்தாண்டுதான் குஜராத் உப்பு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டன்னுக்கு ரூ. 3,000 ஆக இருந்த தூத்துக்குடி உப்பு விலை, குஜராத் உப்பு வருகையால் தற்போது ஆயிரத்து ரூ. 200 ஆகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் 28,000 டன் உப்புக் கப்பல் மூலம் இன்று தூத்துக்குடிக்கு வருவதால் விலை மேலும் குறையும் என்ற கலக்கத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.