சோமாலியா: கடத்தப்பட்ட இந்திய கப்பல்-14 ஊழியர்கள் மீட்பு
டெல்லி: சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய கப்பல், இந்திய மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் கூட்டு முயற்சியால் அதிலிருந்த 14 இந்திய பணியாளர்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பதிவு செய்யப்பட்ட எம் வி நபேயா என்ற இந்திய கப்பல் சோமாலியா துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு துபாய் நோக்கி திரும்பி கொண்டிருந்த போது இம்மாதம் 10-ம் தேதி 7 ஆயுதம் எந்திய கடற்கொள்ளையர்களால் சோமாலியாவின் பூசாசோ கடற்பகுதியில் கடத்தப்பட்டது.
அதனை கடற்கொள்ளையாளர்கள் பாப் எல் மான்டே என்ற இடத்திற்கு இழுத்து சென்று கடந்த 13-ம் தேதி லைபீரிய கப்பல் ஒன்றையும் கடத்த முயன்றனர்.
ஆனால் அப்பகுதியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய கடற்படைக்கு சொந்தமான பிரான்ஸ் போர்க்கப்பல் கடற்கொள்ளையர்களின் அந்த முயற்சியை முறியடித்தது.
இதனையடுத்து கடத்தப்பட்ட இந்திய கப்பலை பிரான்ஸ் போர்க் கப்பல் கண்காணித்து வந்ததுடன் கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பலுக்கு தொடர்ந்து தகவலை பரிமாறியும் வந்தது.
இந்திய மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கடந்த கடற்கொள்ளையர்கள் இவ்விரண்டு கடற்படை கப்பல்களும் இணைந்து கூட்டு அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று அஞ்சி கடத்தப்பட்ட இந்திய கப்பலை சோமாலி கடற்பகுதிக்கு இழுத்து சென்று அதிலிருந்த இந்திய பணியாளர்களின் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கடற்கொள்ளையர்கள் அதனை விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
அதன் பின்னர் அந்தக் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் இந்திய போர்க்கப்பலை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.
இத்தகவலின் பேரில் இந்திய போர்க்கப்பல் பிரான்ஸ் போர்க்கப்பலுடன் ஒருங்கிணைந்து அந்த கப்பலை மீட்டது. அதிலிருந்த 14 இந்திய பணியாளர்களும் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களை இந்திய போர்க்கப்பல் வழங்கியது. தற்போது அந்த கப்பல் ஏமன் நாட்டின் அல்முக்கல்லா என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்திய மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பலின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்ட இந்திய கப்பல் அதிலிருந்த பணியாளர்களுடன் கடற்கொள்ளையர்களுக்கு எந்தவித பிணைத் தொகையும் வழங்கப்படாமல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.