கடையநல்லூரில் மான் சுட்டுக் கொலை
கடையநல்லூர்: கடையநல்லூர் காட்டு பகுதியில் மானை சுட்டு கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறை சார்பில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் இரவு நேரத்தில் மேற்கொண்ட ரோந்தின் போது ஜீப் ஓன்றில் வந்தவர்கள் மான் ஓன்றை சுட்டு கொன்றதை கண்டறிந்தனர்.
வனத்துறையினரை கண்ட கும்பல் ஜீப்பை விட்டு விட்டு காட்டுகள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மான் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட வனஅலுவலர் அப்புரோஸ் உத்தரவின்படி மானை சுட்ட கும்பலை பிடிக்க வனவர ஆர்தர் ராஜா தலைமையிலும், வனவர் இஸ்மாயில் தலைமையிலும், வனசரக அலுவலர் ராஜகுலசேகர பாண்டியன் தலைமையிலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டிற்குள் பிடிபட்ட ஜீப் சென்னையில் பதிவு செய்யப்பட்டு அது தற்போது தென்காசியில் பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாவட்டங்களில் இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவி வருவதால் வனத்துறையினர் வெளி்மாவட்டங்களிலும் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.