குற்றால வளர்ச்சிக்கு ரூ. 4.5 கோடி ஒதுக்கீடு
தென்காசி: குற்றாலம் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கு சுற்றுலாத்துறை ரூ.4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு கூறினார்.
குற்றாலத்திற்கு சுற்றுலா துறை முலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு வந்தார்.
குற்றாலம் மெயினருவி, கார் பார்க்கிங் விஸ்தரிப்பு, படகு குழாம், ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
குற்றாலத்தை மேம்பாடு செய்யும் வகையில் தேவையான பணிகளை செய்வதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் ரூபாய் சுற்றுலாத் துறை சார்பில் ஓதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றாலத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்படும்.
உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதிகள், பூங்காக்கள் உருவாக்கப்படும். குற்றாலம் பற்றி இந்தியா முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் வெளிவரும் நாளிதழ்கள், விமானத்தில் வழங்கப்படும் நாளிதழ்களில் குற்றாலம் பற்றி விளம்பரம் செய்கிறோம்.
மெயின் அருவி கார் பார்க்கிங் 38 லட்சம் ரூபாய் செலவில் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஹைமாஸ் லைட் அமைக்கப்படும். இந்திய சுற்றுலா வரைபடம் என்பது கிடையாது.
சுற்றுலா தலங்களை பற்றி விளம்பரம் செய்து வருகிறோம். குற்றாலத்தை உலக அளவில் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் இறையன்பு.