For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்சம்-பெண் பொறியாளர் கணவருடன் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் உதவிப் பொறியாளர், அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.

துறையூர் அருகே உள்ள சோபனபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். பணியில் இருந்த உதவிப் பொறியாளர் ஜெயஸ்ரீ (32), தனக்கு ரூ.1500மும், மின்வாரிய வணிக ஆய்வாளர் வெங்கடேசனுக்கு ரூ.500ம் லஞ்சம் தந்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

இது குறித்து செல்வராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் சொல்லியபடி ஜெயஸ்ரீயை சந்தித்து செல்வராஜ் சந்தித்து பணத்தைக் கொடுத்தார்.

அதை வாங்கிய ஜெயஸ்ரீ, அங்கிருந்த மின்வாரிய துப்புரவு பணியாளர் கமலத்திடம் அந்தப் பணத்தை கொடுத்து அருகில் உள்ள வீட்டில் இருக்கும் தனது கணவரிடம் அதைக் கொடுக்குமாறு கூறினார்.
இதையடுத்து ஜெயஸ்ரீயின் கணவரான வழக்கறிஞர் பாண்டியனிடம் பணத்தை கமலம் கொண்டு போய் கொடுத்தார்.

ஜெயஸ்ரீ பணம் வாங்கியதையும் அதை கமலம் அவரது கணவரிடம் கொடுப்பதையும் நேரில் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயஸ்ரீயையும் பாண்டியனையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதே போல செல்வராஜிடமிருந்து ரூ.500 பணம் வாங்கிய வணிக ஆய்வாளர் வெங்கடேசனும் பிடிப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஜெயஸ்ரீ, பாண்டியன், வெங்கடேசன், லஞ்சம் வாங்க உதவிய துப்புரவுப் பணியாளர் கமலம் ஆகிய 4 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வனத்துறை அதிகாரி கைது

அதே போல சென்னையில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்த பாண்டியன் செம்மர வியாபாரம் செய்கிறார். கேரளாவில் இருந்து லாரி மூலம் செம்மரம் வாங்கி வந்து அதை தன் குடோனில் வைத்திருக்க சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இந்த அனுமதியை வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டார் உதவி வனக்காவலர் ராஜலிங்கராஜா (55). இதுகுறித்து பாண்டியன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் கூறியபடி பணத்தை ராஜலிங்கராஜாவிடம் தந்தார். அப்போது மாறுவேடத்தில் அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ராஜலிங்கராஜாவின் வீட்டிலும் சோதனை நடத்தினர். ராஜலிங்கராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X