13 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு இடைத்தேர்தல்-புதுச்சேரிக்கு இல்லை
டெல்லி: பத்து மாநிலங்களில் காலியாக உள்ள 13 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுடவுள்ளது. ஆனால், புதுச்சேரியில் காலியாக உள்ள இடத்துக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தாது என்று தெரிகிறது.
மகாராஷ்டிரத்தில் 3, மத்தியப் பிரதேசத்தில் 2, பிகார், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 13 எம்பி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ராஜ்யசபா எம்பிக்களாக இருந்து சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற சரத் யாதவ், சுஷ்மா ஸ்வராஜ், பிரபுல் பாட்டீல், சுசீல் குமார் ஷிண்டே, ஜஸ்வந்த் சிங், பாரூக் அப்துல்லா உள்பட 12 பேரும், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பரத்வாஜும் தங்கள் ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்ததால் இந்தக் காலியிடங்கள் ஏற்பட்டன.
அதே போல புதுச்சேரி சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனாலும் அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கும் குறைவாகவே இந்த ராஜ்யசபா எம்பியின் எஞ்சிய பதவிக்காலம் இருப்பதால் தேர்தல் நடத்தப்படாது என்று தெரிகிறது.