அங்கன்வாடி-'அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வில்லை'
சென்னை: அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிமுக ஆட்சியில் ஊதியம் உயர்த்தப்படவில்லை என்றும் திமுக ஆட்சியில் தான் ஊதியம் உயர்த்தப்பட்டதாகவும் முதல்வர் கருணாநிதி கூறினார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் சட்டப் பேரவையில் இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில்,
சம்பள உயர்வு கேட்பது, அதற்காக குரல் எழுப்புவது சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. குழந்தைகள் மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசுப் பணியாளர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, அவர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஊதியம் வழங்க வழிவகை இல்லை. அங்கன்வாடி பணியாளர்களுக்கு, சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊதிய விகிதம், கடந்த 1998 ம் ஆண்டு முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, கடந்த ஆட்சியில் 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்த ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2006ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அங்கன்வாடி பணியாளர்களின் ஊதிய விகிதம் ரூ. 600 என்பதிலிருந்து ரூ. 1,300 என உயர்த்தப்பட்டது.
குழந்தைகள் மையப் பணியாளர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அறிவித்தவாறு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனியான ஒரு கால முறை ஊதிய விகிதம் வழங்கவும் அரசு முடிவு செய்து, அது நடைமுறைக்கும் வந்துள்ளது.
இதற்கு நன்றி காட்ட வேண்டாமா? அதைத்தான் அந்த ஊழியர்கள் சிலர் காட்டியிருக்கிறார்கள் (சென்னையி்ல் சாலை மறியல் நடத்தியது). லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் சுமார் 7,000 பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது, நன்றி அவர்களிடத்தில் இன்னமும் பட்டுப்போய் விடவில்லை என்பதைக் காட்டுகிறது.
சத்துணவுத் திட்டம் என்பது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தின் அடிப்படையில் இது தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.
அந்தத் திட்டத்தை புதுப்பித்த அதிமுக அரசு, தனது ஆட்சியின் இடையிலே அதில் பணியாற்றுகிறவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவே இல்லை. ஆனால், திமுக ஆட்சியில் அவர்கள் கேட்டதற்கு மேலாக பன்மடங்கு ஊதிய உயர்வும் அவர்களுக்குத் தேவையான வசதிகளும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில் அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி உயர்வாகவும், மதிப்பூதியமாகவும் கொடுக்கப்பட்ட தொகையையெல்லாம் ஏதோ ஊதிய விகிதத்தை உயர்த்தியது போல அறிவித்திருப்பது சரியான விவரம் ஆகாது.
அகவிலைப்படி உயர்வு, கருணைத் தொகை, மதிப்பூதியம் போன்றவை அனைத்து அலுவலர்களுக்கும் பொதுவாக அளிக்கப்படுபவை. அதைச் சுட்டிக் காட்டி ஊதிய விகிதத்தை உயர்த்தினோம் என்று சொல்வது சரியல்ல என்றார்.