For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'திருவிதாங்கூர் ராஜவைத்தியர்' விஜய்குமார் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 1,400 ஆண்டுகளாக பரம்பரை வைத்தியம் பார்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்த 'திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை' டாக்டர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.

சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் உள்ளது திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை. ஆயுர்வேத வைத்திய சாலையான இதை டாக்டர் விஜயகுமார் (60) நடத்தி வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர், 1,400 வருடம் பாரம்பரியமாக தனது குடும்பம் வைத்தியம் பார்த்து வருவதாக விளம்பரம் செய்து வருகிறார்.

இவருக்கு மதுரையிலும் மருத்துவமனை உள்ளது. இவரது மகனும் இதே தொழிலைச் செய்து வருகிறார்.

தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம், மான் கறி, புலிக் கறி சிகிச்சை என பல வகையான சிகிச்சைகளை செய்வதாகக் கூறுவார். இது போக தன்னை வர்மக் கலை நிபுணர் என்று கூறிக் கொள்ளும் விஜய்குமார், சில தனியார் தொலைக்காட்சிகளில் இரவில் பணம் கொடுத்து ஸ்லாட் வாங்கி மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இந் நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, விஜய்குமார் மீது புகார் தந்தார்.
விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் இருந்த தனது மகனை நடக்க வைப்பதாகக் கூறி ரூ.4 லட்சம் வரை வாங்கிக் கொண்டு விஜய்குமார் மோசடி செய்துவிட்டதாக ராஜம்மாள் கூறியுள்ளார்.
ஒருவர் புகார் தந்தது தெரிந்ததும் விஜய்குமாரிடம் ஏமாந்த பலரும் அடுத்தடுத்து புகார்களைக் கொட்ட ஆரம்பித்துள்ளர்.

பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தனது தோல் வியாதியைக் குணப்படுத்துவதாகக் கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அனுப்பியுள்ளார்.

ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரில், தனது மனைவிக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதாக சொல்லி இதுவரை விஜய்குமார் ரூ.22 லட்சத்தைப் பறித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த காந்திமதி என்பவர் தந்த புகாரில், தனது மகன் விபத்தில் சிக்கியதில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதைக் குணப்படுத்த ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டு டாக்டர் விஜயகுமார் மோசடி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறாக விஜய்குமார் மீது 5 பேர் மட்டும் ரூ.35 லட்சம் மோசடி புகார் தந்துள்ளனர்.

இதையடுத்து விஜயகுமார் மீது 4 மோசடி வழக்குகள் பதிவு செய்தனர் போலீசார். இதை அறிந்து கொண்ட விஜயகுமார் முன் ஜாமீன் வாங்க முயன்றார். ஆனால், ஒரு வழக்கில் மட்டுமே முன் ஜாமீன் கிடைத்தது.

இதையடுத்து மற்ற 3 வழக்குகளில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரைப் போலவே ஏராளமான பிராடுகள் பத்திரிக்கைகள், டிவிக்கள் சுய விளம்பரம் செய்து கொண்டு ஊர் ஊராக டூர் அடித்து மக்களை ஏமாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X