மும்பை வந்தார் ஹில்லாரி கிளிண்டன் - தொழிலதிபர்களுடன் ஆலோசனை
அமெரிக்க வெளியுறவு அமைச்சரான பின்னர் இந்தியாவுக்கு ஹில்லாரி வருவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று இரவு அவர் மும்பை வந்து சேர்ந்தார். பின்னர் தாஜ் ஹோட்டலில் இரவு அவர் தங்கினார். இதையொட்டி ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே ஹோட்டல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பிடியில் 3 நாட்கள் சிக்கி பல பேரின் உயிரைக் குடித்தது என்பது நினைவிருக்கலாம்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், ஆதரவு காட்டும் வகையிலுமே இதே ஹோட்டலில் தங்க ஹில்லாரி கிளிண்டன் முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர்களுடன் ஆலோசனை
இன்று காலை ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் கூட்டத்தில் பங்கேற்றார் ஹில்லாரி.
தாஜ் ஹோட்டலை சுற்றிப் பார்த்தார்...
முன்னதாக இன்று காலை தாஜ் ஹோட்டல் முழுவதையும் சுற்றிப் பார்த்தார் ஹில்லாரி. தாஜ் ஹோட்டல் ஊழியர்களையம் அவர் சந்தித்தார். அவர்களை சந்தித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக பின்னர் ஹில்லாரி தெரிவித்தார்.
ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து எழுதினார் ஹில்லாரி.
இதேபோல, தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளான டிரைடென்ட் ஹோட்டலின் ஊழியர்களும் தாஜ் ஹோட்டலுக்கு வந்து ஹில்லாரியைச் சந்தித்தனர்.