ராஜ்யசபாவில் அழகிரி இல்லாததால் அமளி
டெல்லி: ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இல்லாததால் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஒரு கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது அழகிரி அவையை விட்டு வெளியேறினார். இதையடுத்து ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கத் தொடங்கினார்.
அப்போது பாஜக எம்பி நஜ்மா ஹெப்துல்லா எழுந்து, அழகிரி தனது துறை சம்பந்தப்பட்ட கேள்விகளின்போது அவையில் இல்லாமல் இருப்பது குறித்து நோட்டீஸ் கொடுத்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு ஆதரவாக மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக எம்பிக்களும் கோஷமிட்டனர். இதற்கு எதிராக திமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
பாஜக எம்பி அலுவாலியா கூறுகையில், அவை நடவடிக்கைகளில் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனில் நோட்டீஸ் கொடுப்பார்கள். ஆனால், கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நேரத்தில் அழகிரி சென்றுவிட்டார் என்றார்.
அப்போது இடைமறித்த சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்தான் இருக்க வேண்டும் என்று விதி எதுவும் இல்லை. அவரது இணையமைச்சர் கூட பதிலளிக்கலாம். அது எப்படி தவறாகும் என்று கேள்வி எழுப்பவே பாஜக, அதிமுக தரப்பு அமைதியானது.
கர்நாடகத்திற்கு உரம்-அழகிரி உறுதி:
இதற்கிடையே கர்நாடகத்தில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் அழகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கர்நாடகாவில் தற்போது உரத்தட்டுப்பாடு இல்லை. கர்நாடகாவில் தற்போது காரிப் பருவம். இதனால் விசாயத்திற்கு எட்டு லட்சம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படுகிறது. இதில் 4 லட்சம் மெட்ரிக் டன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 2.80 லட்சம் மெட்ரிக் டன் உரம் இந்த மாதத்திலும், 1.20 லட்சம் மெட்ரிக் டன் பைப் லைன் மூலம் வழங்கப்படும்.
கர்நாடகா அரசுக்கு தேவையான அம்மோனியா பாஸ்பேட் உரம் 4.10 லட்சம் மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 3.13 லட்சம் மெட்ரிக் டன் வழங்கப்படும். கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் வழங்கவும் உரத்துறை அமைச்சகம் தயாராக உள்ளது. 20 ஆயிரம் மெட்ரிக் டன் கலப்பு உரம் மற்றும் எம்.ஓ.பி., உரங்கள் வழங்கப்படும்.
மாநில அரசு உரங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதையும், பதுக்கல், கடத்தல் நடைபெறாமலும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அழகிரி.