For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது-ஆந்திரா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது, தமிழகம் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார்.

சித்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட துடித்துக் கொண்டிருக்கிறது ஆந்திர அரசு. இதற்கான பணிகளையும் அது தொடங்கி விட்டது.

இதை கடுமையாக கண்டித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இருப்பினும் திட்டமிட்டபடி அணை கட்டும் பணி நடைபெறும் என ஆந்திரா அறிவித்துள்ளது. தொடர்ந்து பணிகளைப் பாருங்கள் என அதிகாரிகளுக்கு, முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி வந்த ராஜசேகர ரெட்டி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மாநில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் போகிறோம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அணையை கட்ட இருக்கிறோம்.

மத்திய அரசும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்தால் இந்த அணை திட்டம் குறித்த உண்மை நிலவரம் தெரிய வரும்.

தடுப்பணை கட்டப்படும் பகுதியில் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடர்பான பிரச்சினையை பெரிது படுத்துகின்றன.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த அணையின் கொள்ளளவு வெறும் அரை டி.எம்.சி. தான். எனவே தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படாது என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார் ரெட்டி.

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு..

இதற்கிடையே, ஆந்திர மாநில பெரும் நீர்ப்பாசன துறை அமைச்சர் பொன்னால லட்சுமய்யா ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தடுப்பணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்து இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் வேலையை தொடங்கி விடுவோம் என்றும் தெரிவித்தார்.

அக்டோபரில் கிருஷ்ணா நீர் திறப்பு:

இதற்கிடையே கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசும், தமிழக அரசும் ஒப்பந்தம் செய்தபடி அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைத் திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 5 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதனால் கிருஷ்ணா நதிநீரை திறந்து விடும்படி ஆந்திர அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர நீர்ப்பாசன துறை அமைச்சர் பொன்னாலா லட்சுமய்யா தெரிவித்தார்.

3 மாதம் வரை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X