லஞ்சம்-காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: பெண்ணிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார், காவல் நிலையத்திலேயே கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் ஹோட்டல் நடத்தி வரும் இந்திரா, சில சமயங்களில் இரவு 10 மணிக்கு மேலும் அதை திறந்து வைத்திருப்பது வழக்கம்.
இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, இந்திராவிடம் மாதந்தோறும் தனக்கு ரூ.5,000 மாமூல் தர வேண்டும், இல்லாவிட்டால் கடையை மூடுவேன் என்று மிரட்டினார்.
ஒரே தவணையாக கொடுக்க கஷ்டமாக இருந்தால் வாரத்திற்கு ரூ.1,250 லஞ்சமாக தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இது குறித்து இந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இந்திராவிடம் பணத்தைத் தந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதை கருணாநிதியிடம் கொடுக்குமாறு கூறவே, எம்.கே.பி. நகர் காவல் நிலையம் சென்றார் இந்திரா.
இன்ஸ்பெக்டரை அவரது அறையில் சந்தித்து பணத்தைத் தந்தார். அதை கருணாநிதி வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழ்ப்பாக்கம் லோட்டஸ் கார்டனில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
போலீஸ் நிலையத்திற்குள்ளேயே இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டது காவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.