மேட்டூர் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி காவிரியில் அதிகளவில் தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு 1,895 கன அடி தண்ணீர் குடி நீருக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 29 டிஎம்சி நீர் உள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 93.4 டிஎம்சி ஆகும்.
அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டும் போது, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த சில நாட்களில் மட்டம் 90 அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் மேட்டூர் அணையின் பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய 28 முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.