5 வயது சென்னை சிறுமிக்கு ஸ்வைன் ப்ளூ!
ஜெட்டாவிலிருந்து 3 பயணிகளும், லண்டனில் இருந்து ஒரு சிறுமியும் சென்னை வந்தனர். அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் லண்டனில் இருந்து வந்த சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மொத்தம் 15 பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
பள்ளிகளுக்கும் பரவிய பன்றிக் காய்ச்சல்
இதற்கிடையே, புனேவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூடத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. நான்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.
புனே, கார்வே சாலையில் உள்ள ஆங்கில மீடியப் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து நாயுடு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிலிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இருவரில் ஒருவருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.
கடந்த வாரம் இதே பள்ளியைச் சேர்ந்த, அமெரிக்காவிலிருந்து திரும்பிய மாணவனுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியது தெரிய வந்தது. இவனுடைய தம்பிக்கும் பன்றிக் காய்ச்சல் பரவி அவன் மூலமாக மேலும் நான்கு பேருக்கு தற்போது பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது.
பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்தை ஒரு வாரத்திற்கு மூடுமாறு சுகாதாரத் துறை உத்தரவி்ட்டுள்ளது. அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசோதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள 3 பள்ளிக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அனைவரும் 19 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் சிலர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் போய் விட்டுத் திரும்பியவர்கள் ஆவர்.
டெல்லியில் 16 பேருக்கு பரவல்..
இதேபோல, டெல்லியில் 4 குடும் பத்தைச்சேர்ந்த 19 பேர் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு டெல்லி திரும்பினார்கள்.
அவர்களை பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளதா? என்று விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 16 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் விமான நிலைய பரிசோதனைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவர்களுடன் பேசி பழகிய 50 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதி அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
இது போல மேலும் 5 பேருக்கு நேற்று பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை 251 பேருக்கு பன்றி காய்ச்சல் பரவியுள்ளது.
மயங்கிய நிலையில் விமான பயணி:
இதற்கிடையே கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மயங்கிய நிலையில் இருந்ததையடுத்து அவரை போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
கலைமணி (30) என்ற அந்தப் பெண் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தார். அவரிடம் கைப்பையை தவிர வேறு எந்த உடமைகளும் இல்லை. அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.