ஏலத்திற்கு வரும் சிறையில் பறிமுதல் செய்யப்பட்ட 200 செல்போன்கள்
சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200 செல்போன்கள் ஏலம் விடப்படவுள்ளன. ரூ. 10 முதல் ஏலத் தொகை தொடங்குகிறது. யார் வேண்டுமானாலும் இதை ஏலத்தி்ல் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன்களின் நடமாட்டம் படு சகஜமானதாக உள்ளது. குற்றம் செய்து விட்டு உள்ளே வரும் பல பிரபல ரவுடிகள், செல்போன்கள் மூலம் தங்களது தாதாயிசத்தை உள்ளிருந்தபடியே தொடரும் நிலையும் உள்ளது.
இவர்களுக்கு சிறை வார்டர்கள் பலர் பேருதவியாக இருப்பதால் இதை ஒழிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், சிறை துறை ஏ.டி.ஜி.பி. ஷியாம்சுந்தர் உத்தரவின்பேரில் செல்போன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த ஒரு மாதமாக நடந்த சோதனையில், மட்டும் 57 செல்போன்கள் சிக்கின. 28 சிம் கார்டுகளும் சிக்கியது. நுண்ணறிவு பிரிவு சோதனைக்கு சிம் கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில்தான் அதிகபட்சமான செல்போன்கள் சிக்கியது. அவர்களுக்கு உதவிய 2 வார்டன்களும் சிக்கினர்.
திருச்சி சிறையில் ஒரு கைதி, 3 மணி நேரத்தில் 40 பேருடன் பேசியுள்ளாராம்.
இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. சியாம்சுந்தர் கூறுகையில், பலத்த பாதுகாப்பையும் இவ்வாறு ஒரு கைதி பேசியுள்ளார். வார்டன்கள் துணை இல்லாமல் இப்படி நடக்க வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்ட கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிம்கார்டு நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
யார்-யாருக்கு போன் செய்துள்ளான், யார்-யார் அவனை தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.
செல்போன்கள் உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் கைதிகள் கைகளுக்கு கிடைக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, கடந்த 6 மாத காலத்தில் புழல், கோவை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, வேலூர், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய 9 சிறைகளில் பிடிபட்ட 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை ஏலம் விட கூடுதல் டி.ஜி.பி. ஷியாம் சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அந்தந்த மத்திய சிறைகளில் இந்த வாரத்தில் அனைத்து செல்போன்களும் ஏலம் விடப்படுகிறது.