பறந்தபடி சூரிய கிரகணத்தை பார்க்கலாம்!-ஜன்னல் சீட் டிக்கெட் ரூ. 70,000!
இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணம், புதன்கிழமை வருகிறது. இதைப் பார்க்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
மக்கள் மத்தியிலும், வானியல் நிபுணர்கள் மத்தியிலும் இந்த சூரிய கிரகணம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம், கிரகணத்தால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிடர்கள் தங்கள் பங்குக்கு புரளிகளைக் கிளப்பி விட்டுக் கொண்டுள்ளனர்.
ஆசியாவிலேயே பீகார் மாநிலத்தில்தான் நீண்ட நேரம் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.
தெரங்கா என்ற இடத்தில்தான் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் நாசா தெரிவித்துள்ளதால், அங்கு மக்கள் குவிந்து வருகின்றனர். பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் கிரகணத்தைப் பார்க்க நாளை இரவே அங்கு தங்கி அதிகாலையில் பார்க்கவுள்ளார்.
இந்நிலையில், விமானத்தில் பறந்தபடி சூரிய கிரகணத்தை பார்க்கக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிராவல் ஏஜென்சியான காக்ஸ் அண்டு கிங்ஸ் இந்தி நிறுவனம் இந்த விமானத்தை இயக்க உள்ளது.
22ம்ந் தேதி காலை 4.30 மணிக்கு டெல்லியிலிருந்து இந்த விமானம் பீகாரில் உள்ள கயாவுக்கு புறப்பட்டுச் செல்லும்.
சூரிய கிரகணம் முழுவீச்சில் இருக்கும் போது இந்த விமானம் பாட்னா அருகே 41 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்.
6.26 மணியளவில் இந்த விமானம் சூரிய கிரகண நிழலுக்கு நடுவே ஊடுருவி செல்லும். எனவே பயணிகள் சூரிய கிரகணத்தை நன்றாகப் பார்க்க முடியும்.
இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.70 ஆயிரம் ஆகும். மற்ற சீட்டுகளுக்கு ரூ. 29,000 கட்டணமாம். கட்டணம் அதிகமாக இருந்தாலும், 80 சதவீத இருக்கைகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டனவாம்.
இதுகுறித்து காக்ஸ் அன்ட் கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கரண் ஆனந்த் கூறுகையில், எங்களது விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாழ்நாளில் மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால் மக்கள் கட்டணத்தை பெரிதாக பார்க்கவில்லை என்றார்.
இந்த சேவைக்காக ஜெட் லைட் 737-700 விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் இந்த விமானம் வானில் சுற்றிக் கொண்டிருக்கும்.
இந்த விமானத்தில் பயணிக்க 70 வயது முதியவர் ஒருவரும் புக் செய்துள்ளாராம். இவர்தான் வயதில் மூத்த பயணியாம். மிகக் குறைந்த வயது பயணியாக 11 வயது சிறுமி புக் செய்துள்ளாள்.
விமான பயணத்தின்போது மாஜிக் ஷோ, சூரிய கிரகணம் குறித்த விளக்கம் உள்ளிட்டவை காட்டப்படவுள்ளதாம். கேள்வி - பதில் நிகழ்ச்சியும் உண்டாம்.
தெரங்காவில் குவியும் கூட்டம்..
தெரங்கா இப்போது இந்தியாவின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நகருக்கு தனிப்பெருமை உள்ளது.
1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியபட்டா இங்குதான் முகாமிட்டு தனது வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது தனிப் பெரும் சிறப்பாகும். இங்கு தங்கியிருந்துதான் நட்சத்திரங்களின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்தார்.
பாட்னாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெரங்காவில் சூரியகிரகணத்தைப் பார்க்க லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஞ்ஞானிகள், ஆயவாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தெரங்காவில் 3 நிமிடம் 48 விநாடிகளுக்கு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
மக்கள் கூட்டம் அதிக அளவில் வரும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சீனா நடத்தும் சோதனை:
இதற்கிடையே முழு கிரகணத்தின்போது பூமியின் ஈர்ப்பு சக்தி குறையும் என்று கூறப்படுவது குறித்து 6 இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நடத்தத் தயாராகி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள்.
இந்தக் கூற்று உண்மையி்ல்லை என்றே கூறப்பட்டாலும் இதை யாரும் இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.