ஆலடி அருணா கொலை-விடுதலையானவர் கைது!
நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிரமுகர், உரிமம் இல்லா துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2006 ம் ஆண்டு வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய பிரமுகர் சிலரையும், ரவுடிகள் சிலரையும் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள சிவலார்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவரும் இந்த வழக்கில் கைதானார். பின்பு, விடுதலை செய்யப்பட்டார்.
இவரும் ஆலங்குளத்தை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (50) என்பவரும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி, ஆலங்குளம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் இருவரிடமும் சோதனை நடத்தினர்.
அப்போது உரிமம் இல்லா இரட்டை குழல் கைத்துப்பாக்கி ஒன்றை ஆறுமுகமும், நவநீதகிருஷ்ணனும் வைத்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் பாண்டி கைது செய்தார்.