இடைத் தேர்தல்-திமுக சார்பில் போட்டியிட பெண்கள் ஆர்வம்
சென்னை: இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட ஏராளமான பெண்கள் முன்வந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்டு 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இதில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். மனு செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில் நூற்றுக்கணக்கனோர் இன்று அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர்.
ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்ப மனுக்களை வாங்கி ரூ.5,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்பித்தனர்.
பர்கூர் தொகுதியில் போட்டியிட மாநில பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மகளிர் அணித் தலைவி இந்திரா மனு செய்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட எம்.ஏ. பட்டதாரி பெண்ணான மகேஸ்வரி என்பவர் மனு செய்தார். இவர்கள் தவிர ஏராளமான பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் இம்முறை கம்பம் தொகுதியில் போட்டியிட மனு செய்துள்ளார்.
மதுரையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் தம்பி ராமையா இளையான்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.
திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்-திருமா:
இந் நிலையில் இன்று திட்டக்குடியில் நிருபர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன்,
வரும் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும். வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சென்னையில் எழும் தமிழ் ஈழம் இன விடுதலை அரசியல் மாநாட்டை நடத்த உள்ளோம்.
ஆற்று நீர் பிரச்சினைகளில் இந்திய அரசின் அணுகுமுறை தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டிற்கு எதிராகவே அமைந்துள்ளது. காவேரி நீர் பாலாறு, பெரியார் அணை ஆகிய அனைத்து பிரச்சினைகளிலும் தமிழர் நலத்திற்கு எதிராகவே உள்ளது.
நியாயமான நிலையில் கூட இந்தியா அரசு செயல்பட்டதில்லை. இது வேதனையளிக்கிறது. தமிழக முதல்வர் மிக உறுதியாக நின்று அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றார்.