For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் வழக்கு மொழியாவது எளிதல்ல-மொய்லி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவது எளிதான காரியமல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில் சிறப்புரையாற்றிய மொய்லி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

நாட்டில் ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையை மாற்ற 125 நாட்களில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போபாலில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசின் செயல் திட்டமாக அறிவிக்கப்படும்.

நீதிபதிகள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது. அதே போல நீதிபதிகள் மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்படும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இது குறித்து முதல்வர் கருணாநிதியும் வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்று நாட்டின் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியை வழக்கு மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மாநில மொழிகளை வழக்கு மொழியாக்குவது என்பது எளிதான காரியமல்ல. இது குறித்து நீதித்துறையும், மத்திய அரசும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்.

ஓரினச் சேர்க்கை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்துபேசி அவர்களிடம் அறிக்கை பெறப்படும்.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு சுமுகமாக உள்ளது. ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டங்களாகப் பேசி வருகின்றனர். இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் தான் என்றார் மொய்லி.

இந் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் கருணாகரன் தலைமையில் 35 வக்கீல்கள் அதிமுகவில் இருந்து விலகி மொய்லி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X