இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கம்பம், இளையாங்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலின் போது போலி வாக்காளர்கள் சேர்ப்பை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். இறந்தவர்கள், 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர் சேர்ப்பின் போது உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கம்பம் தொகுதியில் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1,65,000 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய 1,45,000 வாக்காளர்களே உள்ளனர். 20,000 பேர் குறைந்துள்ளனர்.
இளையாங்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் 1,45,800 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 1,26,623 ஆனது. சுமார் 19,000 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,20,186. இப்போது 79,000 வாக்காளர்கள் குறைந்து 3,41,240 ஆக உள்ளது.
பர்கூர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 1,97,235 ஆக இருந்தது. இப்போது 13,511 வாக்காளர்கள் குறைந்து 1,83,724 ஆக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 1,40,038 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 1,16,607 ஆக உள்ளது. 23,431 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.