ஸ்ரீவைகுண்டம் -செல்வராஜ் மனைவி விருப்ப மனு - காங்கிரசார் கலக்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ செல்வராஜின் மனைவி விருப்பம் தெரிவித்து மனுச் செய்துள்ளதால் சீட் பெற முயற்சி செய்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பக்கூர், கம்பம், இளையன்குடி ஆகிய 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி இடை தேர்தல் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங் சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஓதுக்கப்படும் என்று தெரிகிறது.
இத்தொகுதியில் போட்டியிட தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங் தலைவர் விஜயசீலன், பொது செயலாளர் மால்முருகன், மாநில பொது குழு உறுப்பினர் மயிலை பெரியசாமி, சிவபாலன், ஆர்.எஸ்.முத்து, தொழிலதிபர் பொன்.பாண்டியன், வக்கீல் மகேந்திரன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த எம்எல்ஏ செல்வராஜின் மனைவி நளினி இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜீ.கே வாசனிடம் அவர் விருப்ப மனு கொடுத்தார்.
இத்தொகுதியில் நளினி போட்டியிட்டால் அனுதாப ஓட்டுகள் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று செல்வராஜீன் ஆதரவாளர்கள் கணிக்கின்றனர்.
நளினி விருப்ப மனு தாக்கல் செய்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் களமிறங்க முயற்சி மேற்கொண்டு வரும் காங்கிரசின் முக்கிய புள்ளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.