சயனைடு அருந்தி பொட்டு அம்மன் தற்கொலை- இலங்கை பாதுகாப்பு நிபுணர்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், போரின் உச்சகட்டத்தின்போது சயனைடு அருந்தி, நந்திக் கடல் லகூன் பகுதியில் குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு நிபுணர் ரோஹன் குணரத்தனே தெரிவித்துள்ளார்.
குணரத்தனே, சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் அரசியல் வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கான சர்வதேச மையத்தின் தலைவராக உள்ளார்.
இலங்கை நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையின்போது பொட்டு அம்மான் ராணுவத்திடம் பிடிபடுவதைத் தவிர்க்க நந்திக்கடல் பகுதியில் சயனைடு அருந்தி கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதேபோன்று அவருடைய மனைவியும் சயனைடு அருந்தியிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களுடைய உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலிகள் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இடம்பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் வழக்கை முடிப்பதற்கு அவர்களுடைய இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இந்திய அரசு கோரியுள்ளது.
புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் எந்த நேரத்திலும் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து வரலாம். அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களை கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருப்பது நிச்சயம் என்றார்.