கம்யூ. எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் ரத்து
சட்டசபையில் இந்த கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று விதி எண் 110ன் கீழ் அவர் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
நேற்று கலை நான் சற்று காலதாமதமாக வர நேரிட்டதால் அதற்கு முன் இந்த அவையின் உறுப்பினர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த செல்வி பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்டைச் சேர்ந்த சிவபுண்ணியம் ஆகியோர் மீது, இந்த அவையிலே பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது குறித்து, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு உரிமைப் பிரச்சனைக் கொடுத்து, அதன் அடிப்படையில் தங்கள் விளக்கத்தை அளிக்க அந்தக் கட்சியினர் அனுமதி கேட்டபோது,
அவை மரபுப்படியும், விதிகளின்படியும் சபாநாயகர் அனுமதி அளிக்க இயலாது என்று கூறிய நிலையில், அந்த இரண்டு கட்டிகளின் உறுப்பினர்களையும் அவையிலிருந்து வெளியேற்ற நேரிட்ட செய்தியை அறிந்தேன்.
பேசுவதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியிலே இருப்போர் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டு தான். அதை பெரிதுபடுத்தி அதுவும் கூட்டத் தொடர் முடியக்கூடிய நேரத்தில் ஒரு உரிமைப் பிரச்சனை வந்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து.
ஆனாலும் பேரவைத் தலைவர் அவர்களைப் பற்றிக் குற்றம்சாட்டி வெளியிலே செய்தியாளர்களிடம் விமர்சனம் செய்தாலும் முழக்கமிட்டாதாலும் அந்த உரிமைப் பிரச்சனையைக் கொண்டு வர நேரிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் இதேபோல உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு திமுக எம்எல்ஏ பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார். முரசொலி, இந்து நாளிதழ்கள் மீதும் உரிமை பிரச்சனை கொண்டு வரப்பட்டு அதன் ஆசிரியர்களுக்கு 15 நாள் சிறை தண்டை விதித்து தீர்ப்பும் தரப்பட்டது.
ஆனால், இப்போதும் அப்படியே நடக்க வேண்டிய அவசியமில்லை.
எப்படியோ நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும் என்பதற்கே, பேரவைத் தலைவராகிய நீங்கள் நேற்று உரிமைக் குழுவுக்கு அனுப்பிய இந்தப் பிரச்சனையை ஆளும்கட்சியின் சார்பாக உறுப்பினர் ஆற்காடு வீராசாமியின் ஒப்புதலுடன் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.
தாங்களும் அண்ணா வழி நின்று பெருந்தன்மையோடு, அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பிய பிரச்சனையை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது எழுந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை சம்பந்தமில்லைமல் சொல்லி முதல்வர் எங்களைக் கொச்சைப்படுத்துகிறார். ஏற்கனவே பலமுறை பேசப்பட்டதையே திரும்பத் திரும்ப சொல்லி கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், அவைக் குறிப்பில் பதிவானதை நான்கு முறையல்ல, நாலாயிரம் முறை கூட சொல்லலாம் என்றார்.
இதையடுத்து கடந்த கால நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வரின் பேச்சு அமைந்துள்ளதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சிறிது நேரம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு திரும்பி வந்தனர்.