சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆக-7ல் திறப்பு
சென்னை: காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஆகஸ்ட் 7ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கையை வாசித்தார் கருணாநிதி. அவர் கூறுகையில்,
கேரளத்திலும் கர்நாடகத்திலும் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 14ம் தேதி 60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 81 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நேற்றிரவு நிலவரப்படி வினாடிக்கு 60,000 கன அடி நீ்ர் வந்து கொண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரு வாரங்களில் நீர் மட்டம் 90 அடியைத் தொட்டுவிடும். இதை மனதில் கொண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 7ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை சம்பா சாகுபடிக்காக திற்பபடும். ஆனால், இந்தாண்டு கர்நாடகம் உரிய நேரத்தில் நீரைத் திறந்துவிடாததால் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லை. இப்போது கன மழையால் கபினி, கிருஷ்ணராஜ சேகர் அணைகள் நிரம்பிவிட்டதால் வேறு வழியின்றி உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் கொள்ளவு 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணைக்கு 53,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 84 அடியை எட்டியுள்ளது.