வாரணாசியில் புனித நீராடலில் நெரிசல்-2 பேர் பலி
வாரணாசி: சூரிய கிரகணத்தையொட்டி வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சூரிய கிரகணத்திற்குப் பின்னர் புனித நீராடுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது.
ஆறுகள், குளங்கள், கடல் உள்ளிட்டவற்றில் மக்கள் புனித நீராடுவார்கள்.
இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. இதையடுத்து வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் கூடி புனித நீராடினர்.
இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தஸ்வமேத் காட் என்ற இடத்தில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் நடந்தது.
குளித்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் கூட்டமாக வெளியேறியபோது, எதிரே குளிக்க வந்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே பெரும் நெரிசலாகி விட்டது. இதனால்தான் இந்த விபரீதம் நடந்ததாக போலீஸ் டிஐஜி மீனா தெரிவித்தார்.