விமானப்படை விமானத்தில் பறந்து விஞ்ஞானிகள் கிரகண ஆய்வு!
டெல்லி: இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வுக்காக ஒரு போர் விமானம் மற்றும் ஒரு சாதாரண பயணிகள் விமானம் மூலம் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வின்போது மிராஜ் 2000 ரக போர் விமானமும், ஏஎன் 32 ரக போக்குவரத்து விமானமும் பயன்படுத்தப்பட்டது.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணத்தை அவர்கள் விமானத்தில் பயணித்தபடி படம் எடுத்துள்ளனர். மேலும் சில சோதனைகளையும் அவர்கள் விமானத்தில் பறந்தபடி செய்துள்ளனர்.
குவாலியரில் உள்ள விமானப்படைத் தளத்திலிரு்நது மிராஜ் விமானம் கிளம்பியது. பயணிகள் விமானம், ஆக்ராவிலிருந்து கிளம்பி கஜூராஹோ வரை சென்றது.
இந்த ஆய்வில் சுயேச்சை ஆய்வு அமைப்பான விக்யான் பிரசார் மற்றும் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்கும் நிகழ்வில் விக்யான் பிரசார், உதய்ப்பூரைச் சேர்ந்த சோலார் அப்சர்வேட்டரி, பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
பயணிகள் விமானம் 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் முன்பக்கமிருந்து சூரிய கிரகணத்தைப் படம் பிடித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வித்தியாசமான ஆய்வு நிகழ்ச்சியில் பயணிகள் விமானத்தில் மொத்தம் நான்கு விஞ்ஞானிகள், தூர்தர்ஷனைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு பயணித்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.