போட்டிக்கு தயாராகும் தேமுதிக-ச.மகவும் போட்டி?
அதிமுக, மதிமுக, பாமக ஆகியவை தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. இடதுசாரிகள் இன்று முடிவெடுக்கவுள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸுடன் நேரடியாக மோதவுள்ளது தேமுதிக. தேமுதிக தோன்றிய பின்னர் இப்போதுதான் முக்கிய கட்சிகளுடன் நேரடி மோதலை அது சந்திக்கிறது.
அதிமுக கூட்டணி போட்டியில் இல்லாததால், பெருவாரியான வாக்குகளைப் பெறக் கூடிய அபூர்வ வாய்ப்பு தேமுதிகவைத் தேடி வந்துள்ளது.
இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள விஜயகாந்த் தயாராகி வருகிறார். அதற்கு முதல்படியாக ஒவ்வொரு தொகுதிக்கும் தேமுதிக பார்வையாளர்களை அவர் அறிவித்துள்ளார்.
கம்பம் தொகுதிக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், பர்கூர் தொகுதிக்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு துணை பொதுச்செயலாளர் ஆஸ்டின், இளையான்குடி தொகுதிக்கு மாபா பாண்டியராஜன், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு மாநில வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணனும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 பார்வையாளர்களும் ஏற்கனவே தொகுதிக்கு சென்றுவிட்டனர். கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசித்து தகுந்த ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
ஐந்து தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 16 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களை விரைவில் சென்னைக்கு அழைத்து நேர்காணல் நடத்துகிறார் விஜயகாந்த். அதன் பின்னர் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரசாரத்தில் குதிக்கவுள்ளார்.
இதுவரை அதிமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுடன்தான் திமுக நேரடி மோதலை சந்தித்தது. ஆனால் முதல் முறையாக தேமுதிகவை நேரில் சந்திக்கவுள்ளது. இந்த இடைத் தேர்தலில் தேமுதிகவினர் பெருமளவிலான வாக்குகளை வாங்கி விட்டால் அது திமுகவுக்கு நிச்சயம் பெரும் சங்கடமாகி விடும் என்பதால் தேமுதிகவின் வியூகத்தை உடைத்து, பெரும் வெற்றியைப் பெற திமுக கவனமாக இருக்கிறது.
மேலும், தேமுதிக வேட்பாளர்களுக்கு அதிமுக கூட்டணிக் கட்சிகள் மறைமுகமாக ஆதரவு தரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பெரும் சிக்கலாகி விடும்.
எனவே அதிமுகதான் இல்லையே என்று அசமஞ்சமாக இருந்து விடாமல் வலுவான வேட்பாளர்களே திமுக சார்பில் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
சரத்குமார் கட்சியும் ரெடி..
அதேபோல இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்துஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் பெரும்பாலானா நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.