அது நகை வியாபாரி சுரேஷ் மண்டை ஓடு அல்ல!
சென்னை: சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் குப்பை மேட்டில் இரண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த மண்டை ஓடு, துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட நகை வியாபாரி சுரேஷ் குமாரின் தலை அல்ல என்று தெரியவந்துள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) நகைகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 6ம் தேதி இவர் மாயமானார். மறுநாள் காலை சூளை பெரியமேடு அருகே பாலித்தீன் பையில் அவரது இரண்டு கைகளும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டிய வால்டாக்ஸ் சாலையில் அவரது இரு கால்களும் கிடந்தன. பூக்கடை என்எஸ்சி போஸ் ரோடு அருகே உடல் பகுதி கிடந்தது. ஆனால், தலை மட்டும் சிக்கில்லை.
இந் நிலையில் கடந்த 19ம் தேதி தம்புசெட்டி தெருவில் குப்பைமேட்டில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓடு குறுக்கு வாட்டில் அறுக்கப்பட்டிருந்தது.
சுரேஷ்குமாரின் தலையை 2 துண்டாக வெட்டி ஆசிட்டில் போட்டு சதை பகுதிகளை அழுக வைத்து மண்டை ஓட்டை தனியாக பிரித்து தெருவில் வீசியுள்ளனர் கொலையாளிகள் என்று போலீசார் கூறி வந்தனர்.
இந்த மண்டை ஓடு பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மண்டை ஓட்டின் வயது உள்பட அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டனர். இதில் மண்டை ஓடு சுரேஷ் குமாருடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
இது பல ஆண்டுகளுக்கு முந்தைய பழைய மண்டை ஓடாக இருக்கலாம் என்றும், 50 வயதுக்கு மேல் உள்ள ஆணின் மண்டை ஓடு என்றும், பற்கள் சிதிலடைந்து காணப்படுவதால் இது சமீபத்தில் இறந்தவரது தாடை பகுதியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மண்டை ஓட்டில் பளபளப்புக்காக ரசாயனம் பூசப்பட்டுள்ளதால் இது கல்லூரி லேபில் இருந்த மண்டை ஓடாக இருக்கலாம் என்று கூறுகின்றர் டாக்டர்கள்.
இதனால் சுரேஷ் குமார் கொலை வழக்கில் போலீசாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.