''முதல்வருக்கு இது மட்டும் காதில் விழுகிறதா?''
சென்னை: எம்எல்ஏக்களுக்கு அரசு வீட்டுமனை ஒதுக்குவதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னர் மானியத்தை ஒழித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டிக்கொள்ள நிலம் கேட்டு பல முறை வலியுறுத்தியிருக்கிறார். ஒரு 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க போவது மட்டுமே உறுதியாக உள்ள ஒரு பதவிக்கு எதற்காக நிரந்தரமான இடம்?.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கே வருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இவர்கள் தொகுதிக்கே போகாமல் தலைநகரில் தங்கிவிட ஊக்கம் தரலாமா?.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கூட்டத்துக்கு வரும்போதும், மன்ற நேரத்தில் வரும்போதும் தங்குவதற்கு என்று வசதியான வீடு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் வசதி எதற்காக?.
2.5 கிரவுண்ட் வீதம் முதல் தவணையாக 100 நபர்களுக்கு ஒதுக்கப்படும் இடம் 250 கிரவுண்டுகள், சென்னையில் ஆற்றோரத்திலும், சாக்கடையோரத்திலும், தெருவோரத்திலும் உள்ள வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில் இந்த ஏற்பாட்டுக்கு ஏன் முன்னுரிமை?.
தன்னை அடிக்கடி கம்யூனிஸ்டு எனப்பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் முதல்வர் இந்த சோஷலிஸ' நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அமைச்சரவையில் இடம் கேட்பது காதில் விழாத அரசுக்கு, வீடு கட்ட இடம் கேட்பது மட்டும் எப்படி விழுகிறது என்பது விந்தையானது என்று கூறியுள்ளார்.