For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைதேர்தலில் நவீன வாக்குபதிவு எந்திரங்கள்-குப்தா

By Staff
Google Oneindia Tamil News

Naresh Guptha
சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடிகளோ, முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி 5 சட்டமன்ற தொகுதிகளின் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 4.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் தொகையை ஒப்பிடும்போது இது குறைவாக இருப்பதற்கு பலர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் காட்டாததே காரணம்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக அதிக புகார்கள் வந்தன. மற்ற மாவட்டங்களில் இந்த அளவுக்கு புகார்கள் வரவில்லை. வீடு மாறும் பலரும் ஆணையத்துக்கு புதிய முகவரியை தராததே இதற்குக் முக்கிய காரணமாகும்.

அடுத்த மாதம் நடக்கவுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அதிகாரிகளுக்கு செல்போன்கள் கொடுக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமே பிற்பகல் 3 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எத்தனை சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது என்ற விவரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு பிறகு 4 மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், மாலை 5 மணிக்கு பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் இந்த வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடைத்தேர்தலில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட புதிய வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த நவீன எந்திரங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், யார் எந்த நேரத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தார் என்ற விவரத்தை துல்லியமாக கண்டறியும் வசதி இதில் உண்டு.

அதே நேரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடிகளோ, முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி கம்பம் தொகுதி உள்ள தேனி மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி உள்ள கோவை மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி உள்ள நெல்லை மாவட்டம், பர்கூர் தொகுதி உள்ள தர்மபுரி மாவட்டம், இளையான்குடி தொகுதி உள்ள ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசின் எந்த நல திட்டங்களையும் செயல்படுத்த கூடாது.

இன்று தொடங்கும் ஒரு கோடி ஏழைகளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் தேர்தல் முடியும் வரை இந்த மாவட்டங்களில் அமல்படுத்தக் கூடாது.

சில அரசியல் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதை மத்திய தேர்தல் ஆணையம் உரிய முறையில் எதிர்கொள்ளும்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்படும். பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்றார்.

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி என்றார் பொத்தாம் பொதுவாக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X