For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு உதவ வேண்டாம்-எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்க முயல்கிறது. எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:

இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது.

ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும்.

இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது?

இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார்.

முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை.

தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது.

இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X