பாஜகவில் திறமைக்கு மரியாதையில்லை-யஷ்வந்த்
டெல்லி: பாஜகவில் திறமையுள்ளவர்கள் எவ்விதம் மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு தனக்கு தரப்பட்ட பதவியே உதாரணம் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதமே நடத்தாமல் அப்படியே அமுக்கப் பார்த்த அத்வானி, சுஷ்மா, அருண்ஜேட்லி மூவரணி கோஷ்டிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினார் சின்ஹா. அவரோடு இணைந்து ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரும் சேர்ந்த மூவரணியை வறுத்து எடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் முக்கிய குழுக்களுக்கான பதவிகளுக்கு அனைத்து கட்சிகளும் உறுப்பினர்களை நியமிப்பது வழக்கம். இதில் சுஷ்மா சுவராஜுக்கு வெளியுறவுத்துறை நிலைக் குழு உறுப்பினர் பதவியை அத்வானி வழங்கியுள்ளார். அதே போல முரளி மனோகர் ஜோஷி தனது செல்வாக்கை பயன்படுத்தி நிதித்துறை நிலைக்குழு உறுப்பினர் பதவியைப் பிடித்துவிட்டார்.
ஆனால், பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த சின்ஹாவுக்கு அந்தத் துறைகளின் நிலைக் குழுக்களில் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழுவின் உறுப்பினர் பதவியை பாஜக வழங்கியுள்ளது.
இதை கிண்டலடித்துள்ள சின்ஹா கூறுகையில்,
எனது 'திறமைக்கேற்ற' பதவியை கட்சி வழங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய தமக்கு 'உரிய பதவியை' பாஜக அளித்துள்ளது.
இத்தகைய 'உயரிய பதவியை' அளித்ததற்காக தனது கட்சிக்கு எப்போதும் 'நன்றியுடையவனாக' இருப்பேன். ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தனது திறமையை கட்சி 'உணர்ந்து' இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுத்துள்ளது.
பாஜகவில் திறமையுள்ளவர்கள் எவ்விதம் மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இந்த நிலை ஒருபோதும் மாறப் போவதில்லை என்றார்.
இவரைப் போலவே வெளியுறவு அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கும் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் பதவியையே அத்வானி ஒதுக்கியுள்ளார்.
இந்தக் குழுவின் தலைவர் பதவி பாஜகவுக்கு தர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பதவியில் ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
எந்த செல்வாக்கும் இல்லாத, மறைந்த பிரமோத் மகாஜனின் மச்சான் என்ற ஒரே காணத்துக்காக கோபிநாத் முண்டேவுக்கும் இந்தக் குழுவில் பதவி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.