For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்கில் போரால் தான் இறங்கி வந்தது இந்தியா-முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

Musharraf
டெல்லி: கார்கில் போரால் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்தது. இந்தப் போரைத் தொடர்ந்துதான் காஷ்மீர் விஷயம் குறித்து பேச இந்தியா முன்வந்தது என்று கூறியுள்ளார் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.

இதுகுறித்து கரன் தாப்பரின் டிவி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் முஷாரப் கூறியிருப்பதாவது..

1999ம் ஆண்டு ஏற்பட்ட கார்கில் போரைத் தொடர்ந்துதான் இந்தியா இறங்கி வந்தது. காஷ்மீர் குறித்து பேச முன்வந்தது. எனவே இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதுவும் சாதாரண வெற்றி அல்ல, மிகப் பெரிய வெற்றி. கார்கில் போரால் இந்தியாவின் நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கார்கில் போருக்கு முன்பு காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேசவே இந்தியா தயாராக இல்லை.

காஷ்மீர் குறித்து இந்தியா கண்டு கொள்ளாமலேயே இருந்தது. எங்களது தலைவர்கள் பலரும் ஐ.நா. சபையில் பலமுறை இதுகுறித்துப் பேசியுள்ளனர். ஆனால் இந்தியா அதுகுறித்து பேசுவதே கிடையாது. ஆனால் கார்கில் போர் அவர்களை (இந்தியாவை) பேச வைத்தது.

கார்கில் போரின்போது, ராணுவம் ஈடுபடவில்லை, தீவரவாதிகள் மட்டுமே ஈடுபட்டனர் என்று நான் சொல்ல மாட்டேன். ராவல்பிண்டி கார்ப்ஸ் மற்றும் வடக்கு பிராந்திய படைகள் கார்கில் போரில் ஈடுபட்டன.

பாகிஸ்தான் படையினருக்குச் சாதகமான முறையில்தான் கார்கில் போர் முடிந்தது. அப்போது கார்கிலை நோக்கி இந்தியா தனது முழு படைகளையும் திருப்பியிருந்தது. பிற பகுதிகளில் இதனால் அது பலவீனமாகவே இருந்தது.

இதனால் இந்தியாவின் பிற பகுதிகளில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

கார்கில் போரை நிறுத்த வேண்டும் என எங்களுக்கு பெரும் நிர்ப்பந்தம் இருந்தது. குறிப்பாக அமெரிக்கா பெரிய அளவில் நெருக்குதலைத் தந்து கொண்டிருந்தது. எனவேதான் போர் நிறுத்தத்திற்கு எதிராக என்னால் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச முடியவில்லை.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நான் நீக்கியது சட்டப்பூர்வமான நடவடிக்கைதான். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் நான் செய்தேன். அதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அதே சமயம் அவரை அவமானப்படுத்தும் வகையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு நான் காரணம் கிடையாது. அவை அதிகாரிகளால் செய்யப்பட்டதாகும்.

மறைந்த பெனாசிர் பூட்டோவுடன் 2007ம் ஆண்டு நான் சில புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டது உண்மைதான். அதுதான் அவருடன் நான் முதல் முறையாக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும். அதில் மறைப்பதற்கேதுமில்லை.

பெனாசிர் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் பிரதமராகியிருப்பார். நான் அதிபராக தொடர்ந்திருப்பேன். இதுதொடர்பாக நான் இரு முறை பெனாசிருடன் பேசியிருந்தேன்.

பாகிஸ்தான் இப்போது மிகவும் சிக்கலான நாடாகி விட்டது. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சட்டம் ஒழுங்கு ரீதியாக பெரும் நெருக்குதல்களை சந்தித்து வருகிறது பாகிஸ்தான்.

ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. மக்களுக்கு திறமையான முறையில் சேவையாற்ற முடியாத நிலையில்தான் சர்தாரி அரசு உள்ளது.

இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன். அப்படித்தான் இன்று பாகிஸ்தான் நிலை உள்ளது என்றார் முஷாரப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X