மூன்றாவது நாளாக தலையைத் தேடும் போலீஸார்!
சென்னை: சென்னை நகை வியாபாரி சுரேஷ் குமாரின் கொலையாளி பிடிபட்டுவிட்ட நிலையில் சுரேசின் தலை இன்னும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள கொலையாளி நேமிசந்த் ஜெயின் செளத்ரியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 6ம் தேதி சுரேஷ்குமாரை கொலை செய்த நேமிசந்த் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி 3 இடங்களில் வீசினான். சுமார் ஒனறரை மாதங்களுக்குப்பின் நேமிசந்த் நேற்று முன் தினம் போலீசாரிடம் சிக்கினார்.
தலையை மகாகவி பாரதிநகர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதரில் வீசியதாக நேமிசந்த் கூறியுள்ளான். இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் மூன்றாவது நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தலை இன்னும் கிடைக்கவில்லை.
அப் பகுதியில் உள்ள கிணற்றில் தலை கிடக்கிறதா என்று தீயணைப்பு படையினர் உதவியோடும் தேடும் பணி நடக்கிறது.
நேமிசந்த் ஜெயின் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனிடம் மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார் அவனை தங்களது காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
சீல் வைக்கப்பட்டுள்ள அவனது வீட்டிலும் தடயவியல் போலீசார் மீண்டும் சோதனை நடத்தவுள்ளனர்.