ஏடிஎம் மையத்தில் சிக்கித் தவித்த நால்வர்
சென்னை: சென்னை அருகே தாம்பரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் சிக்கிக் கொண்ட நான்கு பேரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு இன்று அதிகாலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கார்த்திகேயன், மேடவாக்கத்தை சேர்ந்த மின் வாரிய அதிகாரி ஜான்சன் ஆகிய இருவரும் பணம் எடுக்க சென்றனர்.
பணம் எடுத்ததும் அவர்கள் வெளியே வருவதற்கு கதவை திறந்தனர். ஆனால் கதவு திறக்காமல் சிக்கிக் கொண்டது. அவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் ஏ.டி.எம். மையத்தில் உள்ளேயே தவித்தனர்.
பின்னர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து கண்ணாடிக் கதவைக் கழற்றி இருவரையும் மீட்டனர்.
இந்த நிலையில் காலை எட்டரை மணியளவில் அதே ஏடிஎம் மையத்திற்கு அசோக் குமார், அஸ்வின் ஆகிய இரு மாணவர்கள் வந்தனர். அவர்களும் பணத்தை எடுத்து விட்டு திரும்புகையில் கதவு திறக்காமல் சிக்கிக் கொண்டனர்.
மறுபடியும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். கதவில் பிரச்சினை இருப்பதால் கதவை மூட வேண்டாம் என மையப் பாதுகாவலர் அறிவுறுத்தப்பட்டார்.