இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள்: பார்வர்டு பிளாக்
மதுரை: கூட்டணிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்று, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்மாநில தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
மாநில தலைவர் நவமணி, நிதிச் செயலர் ஜெயராமன், செயலர்கள் மகேஸ்வரன், ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநிலத் தலைவர் நவமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இடது சாரி அணியில் உள்ள எங்களை இவர்கள் எதிலும் கலந்து ஆலோசிப்பதில்லை. இடது சாரிகள் சந்தர்ப்பவாதத்துடன் செயல்படுகின்றனர்.
திருச்சியில் நடந்த கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டும் அழைத்துள்ளனர். தமிழகத்தில் இவர்கள் இருவர் மட்டுமே இடது சாரிகள் என்ற நினைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தலித்துகளுக்காக போராடுவதாக கூறும் இவர்கள், கூட்டணியில் தனித் தொகுதிகளைக் கொடுத்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிகளை நாங்கள் ஆதரிக்க முடியாது.
அதிமுகவும் தேர்தல் புறக்கணிப்பை தன்னிச்சையாகவே முடிவு எடுத்துள்ளது. இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், நாங்கள் அதிமுகஎடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார்.