நீர்மட்டம் 93 அடி-மேட்டூர் அணை நாளை திறப்பு
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93 அடியைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நாளை அணை திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி திறக்கப்படவில்லை. அணையில் போதிய தண்ணீர் இல்லாததும், கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததுமே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி விட்டன.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபிணி அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்தத் தண்ணீரின் வரத்தால், மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.15 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 27,815 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே அணை நாளை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி நாளை அணை திறக்கப்படுகிறது.
அடுத்த மாதம் திறக்கப்படுவதாக இருந்த அணை, ஆடிப் பெருக்கு விழாவையொட்டி நாளையே திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.