கூட்டணி தர்மத்தை காப்பாற்றிய திமுக-தங்கபாலு
சென்னை: காங்கிரஸ் போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கியதின் மூலம் கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளார் முதல்வர் கருணாநிதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
இடைத்தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
சோனியாகாந்தி ஒப்புதலுடன் வேட்பாளர்கள் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் டெல்லியில் அறிவிக்கப்படலாம் அல்லது தமிழக காங்கிரஸ்கூட அறிவிக்கலாம்.
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி நடத்துகிறோம். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுகிறோம். ஆகவே மக்கள் எங்களுக்கு நல்லாரவு கொடுப்பார்கள்.
ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் ஆகும். முதல்வர் கருணாநிதி ஜனநாயக முறைப்படி கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளார்.
தொண்டாமுத்தூரில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு சீட்டு கிடைக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. வேட்பாளர் யார் என்பதை சோனியாகாந்தி முடிவு செய்வார் என்றார்.