கைதிகளுக்கு செல்போன்-பெண் போலீஸ் டிஸ்மிஸ்
கடலூர்: கைதிகளுக்கு பான்பராக், செல்போன், மூக்குப்பொடி சப்ளை செய்த கடலூர் மத்திய சிறை பெண் காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சமீபத்தில் கைதிகளுக்கு கஞ்சா கடத்திய ஜெயிலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் காவலரும் பிடிபட்டுள்ளார்.
கடலூர் மத்திய சிறையில் பெண்களுக்கு தனி பிரிவு உள்ளது. இது ஆண்களுக்கான மத்திய சிறைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெண்கள் சிறையில் தாற்காலிக காவலராகப் பணிபுரியும் தாசுணுவிடம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் முன்னிலையில் பெண் காவலர்களால் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது தாசுணுவிடம் பான்பராக் பாக்கெட்டுகள், மூக்குப் பொடி பாக்கெட்டுகள் மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைதிகளிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்தப் பொருட்களை பல காலமாக சப்ளை செய்து வந்துள்ளார் தாசுணு.
இதையடுத்து இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.