நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் ஐரோப்பா வருகை
இந்த இரு நாட்களும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர். மேலும், விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர்.
'உயிர்க்கும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரும் திரளாக தமிழர்கள் வர வேண்டும் என ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கப் பிரகடனமும் இந்நிகழ்வில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் சுவிஸ், ஜெர்மனியில் நடைபெறும் கருத்தமர்வுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் 2ம் தேதி, சூரிச் அல்விஸ் மண்டபத்தில் நடைபெறும் 'உயிர்க்கும் தமிழீழம்' நிகழ்விலும் கலந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டிய எதிர்காலப் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்ட நிபுணருமான விசுவநாதன் ருத்திரகுமாரன் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் சுவிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் விவரம் அறிய விரும்புவோர், சுவிஸ் தமிழர் பேரவையை (41) 31 381 69 02 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.