இரண்டாம் நிலை நகரங்களைக் குறிவைக்கும் இன்போஸிஸ்!
திருச்சி: ஐடி ஜாம்பவான் இன்போஸிஸ் நிறுவனம் அடுத்ததாக இரண்டாம் கட்ட நகரங்களை குறிவைத்து தீவிரமாகக் களமிறங்குகிறது.
ஏற்கெனவே சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் தவிர, மைசூர், மங்களூர், புவனேஷ்வர் போன்ற நகரங்களிலும் இன்போஸிஸ் அலுவலகங்களைத் திறந்துள்ளது.
இப்போது இதேபோன்ற நகரங்கள் பலவற்றில் இன்போஸிஸ் கிளைகளைத் திறக்கும் முயற்சியில் உள்ளதாக இன்போஸிஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று சிஐஐயின் திருச்சி கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ஐடி நிறுவனங்களின் மந்தநிலை விரைவில் நீங்கும் அறிகுறி தெரிவதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில் ஐடி துறை முழு வீச்சில் மீண்டும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் இன்போஸிஸ் ஒரு வாடிக்கையாளரைக் கூட இழக்கவில்லை என்றும், ஆனால் சற்று வருவாய் இழப்பு ஏற்பட்டது மட்டும் உண்மை என்றார்.