தேர்தல்: அதிமுக அஞ்சுகிற இயக்கம் அல்ல-ஜெ
கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடடில் இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 18.08.2009 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. பொதுவாக, தேர்தல் என்ற உடனேயே களத்தில் இறங்குவது அதிமுகதான். தேர்தலை கண்டு அஞ்சுகிற, பயப்படுகிற, அச்சப்படுகிற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் 2006ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பண பலம், ரவுடிகள் பலம், அதிகார பலம் ஆகியவற்றின் துணையோடு தமிழ்நாட்டில் ஜனநாயகம் தொடர்ந்து குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதன் காரணமாகவும்,
இதை இந்திய தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறியதன் காரணமாகவும், தமிழகத்தில் நடைபெறும் ஜனநாயக் படுகொலைக்கு காந்திய வழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஒன்றரை கோடிக்கும் மேலான உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
தமிழகத்தின் மாபெரும் கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தச் சூழ்நிலையில் திமுக மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும், கருணாநிதியிடம் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்ம் அழகிரி தலைமையில் நடைபெற்ற தென்மண்டல திமுக கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
போட்டியே இல்லாத சூழ்நிலையில் வெற்று ஆரவாரப் பேச்சு எதற்கு? யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? போட்டியே இல்லை என்று வந்தவுடன் எதற்கு தேர்தல்? தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை விரயமாக்குவது எந்த விதத்தில் நியாயம்?.
திமுகவினர் பணத்தை வாரி இறைக்கின்றனர் என்றால் அது கொள்ளையடித்த பணம். தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் செலவிடுகின்ற பணம் மக்கள் பணம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலுக்காக பல லட்சம் ரூபாய் மக்கள் பணத்தை செலவழிக்க இருக்கிறது. இது தேவையற்ற ஒன்று. இந்தப் பணத்தை மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி போன்ற பணிகளை மேற்கொள்ள செலவிடலாம். இவ்வாறு செய்யாமல் மக்கள் பணத்தை விரயம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
எனவே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதை இந்தியத் தேர்தல் ஆணையம் தவிர்ப்பது நல்லது. இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாக இப்பொழுதே அறிவித்து விடலாம். இவ்வாறு அறிவிப்பதன் மூலம் மக்களின் வரிப் பணம் மக்கள் நலப் பணிகளுக்கு பயன்பட ஏதுவாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.