இராமேஸ்வரம்: ஆகம விதிகள் மீறல்-இ.முன்னணி!
ராமேஸ்வரம் இராமநாத கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை முதல் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் ஆகம விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அதன் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இராமமூர்த்தி நம்மிடம் கூறியதாவது:
இந்த விழாவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் பக்திகலா பூஜை நடைபெறும். ஆனால் அதற்கு முன்பே அமைச்சர் பெரியகருப்பனும், அமைச்சர் சுப.தங்கவேலனும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், மதுரை ஆதீனமும் பர்வத்தினி அம்மன் கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கும்பாபிஷேக செய்திகளும், படங்களும் பல்வேறு நாளிதழ்களில் வெளி வந்துள்ளன.
கோவிலில் உள்ள கருவறைக்குள் நுழைய நேபாள நாட்டு மன்னருக்கும், இலங்கை மன்னருக்கும், இராமநாத மன்னருக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், பூரி சாமியாருக்கும் தான் உரிமை உள்ளது. கோவிலில் தீட்சித்தை பெற்ற சிவாச்சாரியார்களே பூஜை செய்ய இயலும்.
ஆகம விதிகள் இப்படி இருக்க அமைச்சர் முன்னிலையில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன.
இது குறித்து கோவில் நிர்வாகி இளங்கோவனிடம் கேட்டபோது, எனக்கு தெரியாது என்கிறார். எதுவும் தெரியாவர் எப்படி கோவிலை நிர்வகிக்க முடியும்.
அதனால் தான் ஆகம விதிமுறைகளை மீறலை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்பாட்டம் நடத்தினோம். இதைத் தொடர்ந்து எனக்கு சென்னை சேத்துப்பட்டில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் அசிங்கமான வார்த்தைகளால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎஸ்பி கமலாபாயிடம் புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.
இந்த புகார் மனு குறித்து ராமேஸ்வரம் டிஎஸ்பி அலுவலகம், கோவில் காவல் நிலையம் ஆகியவற்றில் விசாரித்த போது தகவல் தர மறுத்துவிட்டனர்.