கொழும்பு, வவுனியாவில் 2 முக்கிய எல்டிடிஇ தளபதிகள் கைது
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரு தளபதி கொழும்பிலும், வான் படைப் பிரிவைச் சேர்ந்த முக்கிய தளபதி வவுனியா முகாமிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கைது செய்யப்பட்டவர் சயனைடு அருந்தி தற்கொலை செய்ய முயன்றபோது அதைத் தடுத்து போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றை தீவிரவாத தடுப்புப் பிரிவு படையினர் முற்றுகையிட்டனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பாக்கியராஜ் பிரதீப் என்பவர் சயனை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அதை தடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த வீட்டிலிருந்து தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் ஜாக்கெட், வெடிபொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாம்.
தெரிவித்தன.
பிரதீப், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய தளபதி என இலங்கைத் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இவரிடம் புலிகள் அமைப்பினர் யாரேனும் கொழும்பில் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் உள்ள ஆனந்தகுமாரசாமி முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட உதயன் எனப்படும் செல்லையா உதயகுமார் என்ற இளைஞர் விசாரணையின்போது தெரிவித்த தகவல்களையடுத்தே கொட்டாஞ்சேனையில் பிரதீப் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்படைத் தளபதி கைது..
இதேபோல வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த வான்படை தளபதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவத்தினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வான்படை குறித்த பல ரகசியத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள வான்படையைச் சேர்ந்த விமானிகளை கண்டுபிடித்துக் கைது செய்ய ராணுவம் நடவடிக்கையில் இறங்கும் எனத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட வான் படைத் தளபதி யார், அவரது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.