பெரியார் நூல்-பெரியார் திகவுக்கு இடைக்கால தடை
சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்கள், சொற்பொழிவுகளை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு டிவிசன் பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.
இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கி.வீரமணி உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்தார். அதில், குடியரசு பத்திரிகையில் வெளிவந்த பெரியார் கருத்துக்கள், படைப்புகள் ஆகியவற்றை தொகுத்து குறுந்தகடாக வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த குறுந்தகட்டை குறுக்கு வழியில் கைப்பற்றி பெரியார் திராவிடர் கழகம் வெளியிட முயற்சி செய்கிறது.
இதை தனி நீதிபதி தமது கருத்தில் கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகத்துக்கு அனுமதி அளித்தால் எங்களுக்கு பேரிழப்பு ஏற்படும். எனவே அவர்கள் வெளியிட இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று வீரமணி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரவிராஜ பாண்டியன், நீதிபதி ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் பெரியாரின் தொகுப்பு வெளியிட பெரியார் தி.கவுக்கு தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு டிவிசன் பெஞ்ச் தடை விதித்தது. இதை வெளியிடுவதில் தற்போதைய நிலை (தடை) தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்கும்படி பெரியார் திராவிட கழகத்துக்கு நோட்ஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.